பிறந்த அடுத்த
நொடியில் குழந்தை அழவேண்டும். அப்படி அழாமல் போனாலோ, குழந்தையின் உடல்
'நீல’ நிறமாக இருந்தாலோ, வேறு ஏதேனும் வெளியில் தெரியக்கூடிய பிரச்னைகள்
இருந்தாலோ, உடனடியாக சிகிச்சை அளித்துவிடலாம். ஆனால், வளர்சிதை
மாற்றங்களால் ஏற்படக்கூடிய சில நோய்களை எப்படிக் கண்டறிவது? முடியும்!
இதற்கு, குழந்தை பிறந்த ஏழு நாட்களுக்குள் ரத்தப்
பரிசோதனை செய்து பிரச்னை ஏதும் உள்ளதா என்பதைக் கண்டறியப்படும் பரிசோதனை
முறை உள்ளது. நோய் வருவதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டால், உடனே பரிசோதனை
செய்து, துரிதமாக சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தையைத் தீவிர
பாதிப்பிலிருந்து காப்பாற்றிவிட முடியும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்
கழகத்துடன் (Indian Council of Medical Research & ICMR) இணைந்து
இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் சென்னை 'கருப்பை சிசு பராமரிப்பு
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்’ (Fetus Care Research Foundation)
அறங்காவலரும், குழந்தை நல நிபுணருமான டாக்டர் இந்திராணி சுரேஷிடம்
விரிவாகப் பேசினோம்.
'கடந்த ஐந்து ஆண்டுகளில், சென்னையில் மட்டும்
30,000 குழந்தைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில், 727
குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தைராய்டு குறைபாடும், 2036 குழந்தைகளில் ஒரு
குழந்தைக்கு அட்ரீனல் சுரப்பிக் குறைபாடும் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த
இரண்டு குறைபாடுகளுமே, சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக்கூடியவைதான்.
அவற்றுக்கான மருந்துகளும் மிகக் குறைந்த விலையே. ஆனால் சிகிச்சை தராமல்
போனால், குழந்தைக்கு மந்த புத்தி, ஞாபக மறதிக் குறைபாடு, உயரம் குறைவு
மற்றும் குடல் நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 'ஹைப்போ தைராய்டிசம்’
குறைபாட்டினால் மூளைவளர்ச்சி பாதிக்கப்படலாம். அட்ரீனல் சுரப்பிகள்
குறைபாடு (கான்ஜினெட்டல் அட்ரீனல் ஹைபர் ப்ளேஸியா), பெண்குழந்தைகளின்
பிறப்பு உறுப்பில் மாற்றம் ஏற்படும். அதனால்தான், பிறந்ததும் கண்டறிதல்
பரிசோதனை அவசியம் என்ற பிரசாரத்தை இப்போது தொடங்கி இருக்கிறோம். இவை
எல்லாமே 'மெட்டபாலிக் டிஸ்ஆர்டர்’ எனப்படும் வளர்சிதைக் குறைபாடுகள்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கண்டறிந்து சிகிச்சை
அளிப்பதன் மூலம், தீவிரப் பாதிப்படையாமல் குழந்தையைக் காப்பாற்றலாம்.
குழந்தை பிறந்த 48 மணி நேரத்துக்குப் பிறகு, 72 மணி
நேரத்துக்குள் இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். சிசுக்களின் குதிகாலில்
இருந்து 4 அல்லது 5 சொட்டு ரத்தம் எடுத்துச் செய்யப்படும் எளிய ரத்தப்
பரிசோதனைதான். ஒரு வாரத்துக்குள் ரிப்போர்ட் வந்துவிடும். இதில் ஏதேனும்
அசாதாரணமாகத் தென்பட்டால், விரைவாக அடுத்தக்கட்டப் பரிசோதனை மற்றும்
சிகிச்சையைத் தொடங்க வேண்டும். நோயின் வெளிப்பாடு தெரிவதற்கு முன்பே இந்த
ஸ்கிரீனிங் செய்யப்படுவதால், பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால் நோயை
உறுதிப்படுத்தும் டயக்னாஸ்டிக் டெஸ்ட் செய்யவும், அதிலும் பாசிட்டிவ் என
வந்தால், மருந்தைத் தொடங்கவும் மிக உதவியாக இருக்கும்.
பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் பி.சி.ஜி., போலியோ
டிராப்ஸ் போடுவது போலத்தான் இதுவும். எல்லாக் குழந்தைகளையும்
பரிசோதித்தால்தான், நோய் தாக்கி இருக்கும் குழந்தையைக் கண்டறிய முடியும்.
ஐந்து நோய்களுக்கான பரிசோதனைக்கு 1,200 ரூபாய் செலவாகும். வரும்முன்
காப்பதுதான் இந்தப் பரிசோதனையின் முக்கிய நோக்கம். தற்போது சென்னை மற்றும்
பெரிய நகரங்களில் இதற்கான வசதி உள்ளது. கூடிய விரைவில் எல்லா ஊர்களிலும்
எல்லா மருத்துவமனைகளிலும் இந்தப் பரிசோதனை செய்துகொள்ளும் வசதியைக்
கொண்டுவந்துவிடுவோம்'' என்றார் டாக்டர் இந்திராணி.
- பிரேமா
நெருங்கிய உறவுக்குள் திருமணம், காலம் தாழ்த்தி திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
முதல்
குழந்தைக்கு மரபுரீதியாக ஏதேனும் குறைபாடு இருந்தால், அது என்ன
காரணத்தினால் என்று தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்த குழந்தையும் அதேபோலப்
பிறக்கலாம். எனவே இரண்டாவது குழந்தையை, பாதிப்பு இருக்கிறதா என்று
முன்கூட்டியே பரிசோதனை மூலம் உறுதிசெய்த பின் பெற்றுக்கொள்ளலாம்.
குடும்பத்தில்
யாருக்கேனும் ஊனம், குறைபாடு அல்லது நோய் இருந்தால், அதனை உடனடியாகக்
கண்டறிந்து, ஆலோசனைபெறுதல் முக்கியம். மீண்டும் அந்த நோய் வர வாய்ப்பு
இருக்கிறதா என்ற மரபியல் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம்.
கர்ப்பிணிகளுக்கு 3-ம் மாதத்தில் செய்யப்படும் ஸ்கேனில் 'டவுன்சின்ட்ரோம்’ குறைபாட்டைக் கண்டறியலாம்.
5-வது மாதம் செய்யப்படும் 'அனாமலி ஸ்கேன்’ மூலம், குழந்தைக்கு இருக்கும் உள்ளுறுப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடிக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக