அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பொறியியல் படிப்பு 2 - எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்

சிறப்புத் தொடர் 'ட்ரிபிள் இ' என்படும் இ.இ.இ. பிரிவு (எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங்) பொறியியல் படிப்பை யார் தேர்வு செய்யலாம், அதில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? எவற்றையெல்லாம் அதில் கற்க முடியும் என்பதை கிண்டி பொறியியல் கல்லூரி இ.இ.இ. துறை புல முதல்வர் முனைவர் பா.உமா மகேஸ்வரி விளக்குகிறார்...



''வாழ்க்கை என்பது இன்றைக்கு மின்சாரம் இல்லாமல் கற்காலம் தான் இல்லையா? நீங்கள் இந்தத் துறைக்கு வருகிறீர்கள் என்றால், உங்களுக்கு எண்ணற்ற சுவாரசியங்கள் காத்திருக்கின்றன. சவால்களும் தான். எதையாவது செய்து பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வமும் தன் முனைப்பும் உண்டா... நீங்கள் இங்கே தாராளமாக வரலாம்.

முதலில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மூன்றுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை விளக்கினால் நன்றாக இருக்கும். அறிவியலின் அடிப்படைகள் சார்ந்து தங்களின் செயல்களை கட்டமைத்து கொள்பவர்கள் விஞ்ஞானிகள்; மக்களின் பயன்பாடு தேவைகள் சார்ந்து இயங்குபவர்கள் தொழில்நுட்பவாதிகள். இரண்டுக்கும் இடைப்பட்ட வகையில் பங்காற்றுபவர்கள்தான் பொறியியல் வல்லுனர்கள்.

ஒரு பொறியியல் வல்லுனராக ஆக விரும்பும் மாணவர் தன்னுடைய பள்ளிப் பாடம் சார்ந்த அடிப்படைகளை தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அடுத்தபடியாக ஒவ்வொரு விஷயத்தையும் மனதில் காட்சிப்படுத்தி பார்க்க பழக வேண்டும். ஒரு குறிப்பிட்ட பகுதியை ஒரு மின்சார மோட்டாரில் மாற்றினால் என்ன மாற்றம் அல்லது மாறுபாடு நிகழும் என சிந்திக்க வேண்டும். அது சார்ந்து செயலாற்றுகிற பொழுதுதான் புத்தாக்கங்கள் உண்டாகின்றன. அப்படி யோசிக்கிற மாணவர்கள் வெறுமனே எப்படி ஒரு மின்சாரக் கருவி செயல்படுகிறது எனப் பிரித்து, சேர்த்து அறிந்து கொள்வதோடு தங்களின் தேடலை நிறுத்திக்கொண்டால் அது பெரிய தவறு.

அந்தக் கருவியில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம் என யோசிக்க வேண்டும். எவற்றை எல்லாம் மாற்றினால் இன்னமும் சிறப்பாக அது செயலாற்ற முடியும் என தன்னுடைய சிந்தனையை முடுக்க வேண்டும்.
நீங்கள் படிக்கப்போவது...

இந்தத் துறைக்குள் நுழையும் பிள்ளைகள் ஒரு கருத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். மொத்தம் நான்கே நான்கை சார்ந்து இவை யாவும் இயங்குகின்றன. மின்னியல், மின்சார தேக்கு திறன், இயந்திர ஆற்றல், காந்த தூண்டல். இந்த அடிப்படையைதான் வெவ்வேறு உருவங்களில் நான்கு வருடம் முழுக்க நீங்கள் படிப்பீர்கள். இதை நீங்கள் புரிந்துகொண்டு சிக்கலான விளக்கங்களை படிக்க முயல்கிற பொழுது இந்த கூறுகளாக அந்த விளக்கத்தை பகுத்து படிக்க முடிந்தால் அல்லது முயற்சித்தால் முடிந்தது விஷயம்.

கதை மாதிரி இந்த பொறியியலின் எண்ணற்ற சங்கதிகளை சொல்லித்தரும் எண்ணற்ற நல்ல புத்தகங்கள் உள்ளன.  ஒரு காதலோடு பாடத்தை அணுகினால் போதும். நீங்களே ஒரு ப்ரெட் போர்டு எடுத்து சர்க்யூட்டை இணைத்து இயக்கி பார்த்தால் அதில் கிடைக்கிற ஆனந்தமே தனி. அந்த தேடல் போதும் , எப்படி கற்பது என்பதை முதலில் கற்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களின் துணையை நல்ல நூல்களின் துணையை நாடுங்கள்.

நீங்கள் உங்கள் பாடத்தில் தேறினால் எண்ணற்ற துறைகளில் வேலை வாய்ப்பு உள்ளது. எண்ணற்ற மின் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்களில் நீங்கள் தவிர்க்க முடியாத அங்கம் ஆவீர்கள் .அதே மாதிரி மின்சாரம் உற்பத்தி செய்யும் மையங்கள்,நிலையங்கள்,அரசு துறைகள் ஆகியவற்றிலும் உங்கள் பங்களிப்பு மகத்தானது .எல்லா பெருநிறுவனங்களுக்கும் சிறப்பான, செயல் திறன் கூடிய தயாரிப்புகள் தேவைப்படுகின்றன .ஆகவே உங்களுக்கான வேலை வாய்ப்புகள்,மேற்படிப்புகள் அளவில்லாதவை .நீங்கள் எந்தெந்த துறைகளில் வேலை பெறலாம்,எப்படி மேற்படிப்பை அணுகலாம் என பார்ப்போம்.

உங்களுக்கு பாடங்கள் சர்க்யூட் தியரி என்கிற பாலபாடத்தில் இருந்து ஆரம்பிக்கும். மின்சாரம் என்று வந்துவிட்டாலே மின்தடை கூடவே உள்ளேன் அய்யா சொல்லும். அதை தெளிவாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மின்தாங்கு திறனை புரிந்து கொள்ளுதல் பேட்டரி வடிவமைப்பில் மிகப்பெரிய உதவியாக இருக்கும் ஆர்.எல்.சி பற்றி பள்ளியில் படித்து இருப்பீர்கள். எவ்வளவு நேரம் சார்ஜ் ஆக ஆகிறது; ரீசார்ஜ் ஆக ஆகிறது என்பதையும்; ஆற்றல் எவ்வளவு நேரத்தில் தீர்ந்து போகிறது என்பதையும் கூர்ந்து படிக்க வேண்டும். அப்படி செய்கிற பொழுதே நீங்கள் உங்களுக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டிய வினா? இவ்வளவு காலத்தில் ஆற்றல் தீர்ந்து போகிறதே இந்த நேரக்காரணியை ஏன் நாம் இன்னமும் சீர் படுத்தக்கூடாது என பயணியுங்கள். இது உங்களுக்கு எண்ணற்ற வாசல்களை திறந்து விடும் கட்டுப்பாட்டு அமைப்பு பற்றியும் படிப்பீர்கள். உண்மையில் கட்டுபாட்டு அமைப்பு மனிதனுக்கு கூட இருக்கிறது.

மனிதனே ஒரு மிகப்பெரிய கட்டுப்பாட்டு அமைப்பின் விளைவால் இயங்குபவன்தான். ரத்தமும் சதையுமாக மருத்துவன் நோயாளியை அணுகுவது போல, நீங்கள் கருவிகளை, சர்க்யூட்களை அணுக வேண்டும். அப்படி அணுகுவது நீங்கள் சிறப்பான உயரங்களை தொட  கணிதம்தான் உங்களை உதவப்போகிற உற்ற நண்பன் எந்த சிக்கலை எடுத்துக்கொண்டாலும் அதை நீங்கள் வரையறுக்க வேண்டியது கட்டாயம். அதற்கு கணிதம்தான் உதவும். சூத்திரங்களின் மூலம் அதை நீங்கள் சாதிக்க முடியும். இவையெல்லாம் இல்லாமலே சில மேதைகள் சாதித்தார்களே என நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கு என்று தனித்துவமான ஒரு கணக்கிடும் முறை கண்டிப்பாக இருந்தது. நீங்களும் அப்படி உங்களுக்கான பாணியில் அடிப்படைகள் பலமாக இருந்தால் பயணிக்கலாம்.

தேவைகள் என்னென்ன?

நீங்கள் அந்த சூத்திரங்களை கொண்டு மாதிரிகளை உருவாக்க முடியும். அந்த மாதிரிகள் எப்படி பயன்பாட்டுக்கு உகந்ததா என ஆய்வும் செய்ய முடியும். இந்த ஆய்வை நீங்கள் செய்து வடிவமைக்கும் திறன் அமைந்து விட்டால் நீங்கள் பல நிறுவனங்களால் (செல்போன், டிவி, கணினி, மின்சார உபகரணங்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள்) தேடப்படுவீர்கள்.

இன்றைக்கு பல்வேறு புள்ளிகளில் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. இவற்றையெல்லாம் மனிதர்களே செய்து கொண்டு இருக்க முடியாது. அப்பொழுது தான் தானியங்கி அமைப்புகள் பயன்பாட்டுக்கு வரவேண்டி இருக்கிறது. அதற்கு மைக்ரோபிராசசர்கள், மைக்ரோகண்ட்ரோலர்கள் இங்கே தான் ஹீரோவாகிறார்கள். இவர்களை நீங்கள் பிடித்துக்கொண்டால் பின்னி விடலாம். இன்னமும் எத்தனையோ கச்சிதமான தானியங்கி மின்சார உபகரணங்களுக்கான தேவைகள் உள்ளன. அதை இதைக்கொண்டு நீங்கள் சாதிக்க முடியும். அப்படி ஆய்வுகள் மேற்கொள்வது வானியல்,செயற்கைக்கோள் சார்ந்த துறைகளில் சாதிக்க உதவும் .எல்லா துறைகளிலும் தானியங்கி தன்மை தேவைப்படுவதால்

இதுவரை மின் உபகரணங்கள் சார்ந்தே நாம் பேசி வந்திருக்கிறோம். இப்பொழுது மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது, அது எப்படி மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது, அதில் என்னென்ன இழப்புகள் உண்டாகின்றன. அதைப்பற்றி பவர் சிஸ்டம்ஸ் உங்களுக்கு சொல்லித்தரும்.இந்த நாட்டின் மின்சார பற்றாக்குறையை தீர்க்கும் துறைகளில் வல்லுனர்களுக்கு காத்திருக்கிறார்கள். இந்த பிரிவில் மேற்படிப்பு  படித்தால் பொருளும்,நிறைவும் சேர்ந்தே கிட்டும்.

இன்னமும் சொல்வதென்றால் மிகப்பெரிய ஆற்றல் இழப்புகளை உங்களின் சின்ன சின்ன திட்டங்களின் மூலமா கச்சிதமாக களைய முடியும். உங்களின் கல்லூரியிலேயே எவ்வளவு ஆற்றல் வீணாகிறது என அறிந்திட முயலுங்கள்; அதை எப்படி சரிசெய்வது என உங்கள் துறை சார்ந்து தேடினால் சுவாரசியமான பல காரியங்களை செய்ய இயலும். அதை பொறியியல் சார்ந்து கட்டமைக்கலாம்.

நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

இன்னொரு முக்கியமான வாய்ப்பு இங்கே இருக்கிறது. நாம் மாற்று ஆற்றல்களை பற்றி பேசுகிறோம். ஆனால் அதை முழுமையாக கட்டமைக்கிறோமா என்றால் இல்லை. எடுத்துகாட்டாக, சோலார் செல்களை வீட்டில் போடுவார்கள் - ஆனால், சோலார் ஹீட்டர்கள் இருக்காது. இதனால் என்ன ஆகிறது என்றால் மீண்டும் ஒரு முறை ஆற்றல் விரய சுழற்சி உண்டாகிறது. இதை தவிர்க்க நீங்கள் களத்தில் இறங்கலாம். இதன் பின்னே அவ்வளவு வாய்ப்புகள் உள்ளன.

புதிய மின்சார வடிவமைப்புகளை நீங்கள் உருவாக்க முடியும். அதற்கு நீங்களே செய்து பார்க்க வேண்டியது அவசியம். தவறுகள் செய்ய அஞ்சவே அஞ்சாதீர்கள். நீங்கள் வடிவமைப்பதை சொல்லும் படி செயலாற்ற வைக்க நிரல் எனப்படும் ப்ரோக்ராமிங் கட்டாயம். அதற்கு கணினி துறையில் கொஞ்சம் வல்லமை வேண்டும். அதற்கு இன்னமும் செயலில் இறங்கும் ,முனைப்பு வேண்டும்

வோல்டேஜ் ஏற்றி மின்சார இழப்பை குறைத்தல் சார்ந்து செய்வதற்கு எண்ணற்ற அம்சங்கள் உள்ளன. இப்பொழுது எம்பெடட் சிஸ்டம்ஸ் அற்புதமான உட்பிரிவு. இது கருவிகள், உபகரணங்கள் ஆகியவற்றுக்குள் மின்சார மொழி பேசிக்கொள்ள உதவும். கேட்கவே நன்றாக இருக்கிறது இல்லையா? சின்ன சின்ன மாற்றங்களை கருவியில் செய்து மிகப்பெரிய விஷயங்களை சாதிக்க வழிசொல்லும் மந்திர சாவி அது.

ஒரு மைக்ரோசிப்பை இணைத்து விட்டு நிரலியை போட்டு நீங்கள் செயல்படுத்தினால் சொல்வதை கேட்கும் கருவி... இந்த மைக்ரோ பிராசசர் விலை மலிவானது தான், அதை கொண்டு நீங்கள் புதிய மாற்றங்களை கொண்டு வந்தால் அதை சந்தைப்படுத்தலில் தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவுவார்கள்.

இறுதியாக இப்படி சொல்லி முடிக்கலாம். மிகப் பெரிய கட்டடங்களைகூட அழகாக நிலநடுக்கம் வந்தால் தாங்குகிற வகையில், அப்படியே பெயர்க்கிற வகையில் நீங்கள் படிக்கும் பொறியியல் படிப்பை கொண்டே செய்ய முடியும். பாடப்புத்தகங்களில் மட்டும் படிக்காமல் உங்களை சுற்றி இருக்கும் எல்லாவற்றிலும் கற்க ஆரம்பியுங்கள்; இதை சுமையாக நினைக்காதீர்கள். நிறைய செய்ய வேண்டும் என்றில்லை; செய்வதை திருந்த செய்யும் மனமுள்ளவர் நீங்கள் என்றால் உங்களுக்கான ஏரியா இதே தான். இந்த முறையில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொண்டு செயலாற்றினால் கூட நீங்கள் ராஜாதி ராஜா தான்" என்கிறார் முனைவர் பா.உமா மகேஸ்வரி.

- பூ.கொ.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக