சென்னை : தமிழக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஆந்திர மாநிலம் புத்தூரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்தது
இது தொடர்பாக காவல்துறையினரால்
அளிக்கப்பட்ட பேட்டிகளும், வழங்கப்பட்ட அறிக்கைகளும் பல சந்தேகங்களை
எழுப்பியுள்ளதாக பலதரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது
தொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லி
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த
போலீஸ் பக்ருத்தீன், பண்ணா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரை தனிப்படை
காவலர்கள் ஒரு வழியாக ஆந்திர மாநிலம் புத்தூரில் கைது செய்தனர். இந்த கைது
நடவடிக்கைகள் காவல்துறைக்கு பெருமையைத் தேடித் தந்த போதிலும், கைதுக்குப்
பின்னரான காவல்துறையின் நடவடிக்கைகள் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளன.
இந்த குழப்பத்திற்கு காரணம், காவலர்கள்
சொன்னதாக மீடியாக்கள் வெளியிட்ட செய்திகள் தான். வேலூர் குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் போலீஸ் பக்ருத்தீனை ஆஜர்படுத்திய காவலர்கள், இந்துத்துவா
அமைப்புகளின் பிரமுகர்களான பரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி,
மதுரை சுரேஷ், சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் வெள்ளையப்பன் ஆகியோரை போலீஸ்
பக்ருத்தீன் கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார் என
தெரிவித்திருந்தனர். இதை மீடியாக்களுக்கு காவல்துறையினர்
தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், முன்னதாக கடந்த ஜூலை 26ஆம்
தேதி அறிக்கை வெளியிட்ட காவல்துறை தலைவர் ராமானுஜம், பரமக்குடி முருகன்,
டாக்டர் அரவிந்த் ரெட்டி ஆகியோரை கொலை செய்த குற்றவாளிகள் பிடிபட்டு,
சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த இருவரின் கொலைகளுக்கான பின்னணி
காரணங்கள் நிலத் தகராறு, கொடுக்கல் - வாங்கல் பிரச்சினை தான் என்றும் அந்த
அறிக்கையில் தெளிவுபட கூறியிருந்தார். இந்த குற்றவாளிகள் மீது
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றும் காவல்துறைத்
தலைவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
இச்சூழலில், மேற்கண்ட இருவரது கொலைகளையும்
போலீஸ் பக்ருத்தீன் தான் செய்தார் என இப்போது காவலர்கள் சொல்வது காவல்துறை
தலைவரின் அறிக்கைக்கு முரணாகவும், மக்கள் மத்தியில் குழப்பத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
இதையொட்டி, திமுக தலைவர் கருணாநிதியும்,
காவல்துறையின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாகவும், குழப்பத்தை
ஏற்படுத்தியுள்ளது என்றும் பரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி
ஆகியோரை கொலை செய்த உண்மையான குற்றவாளிகள் யார்? போலீஸ் பக்ருத்தீன்
குழுவினரா? அல்லது ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டிருப்பவர்களா? இதில் ஒரு தரப்புதான் குற்றவாளிகள் என்றால்
இன்னொரு தரப்பினர் மீது காவல்துறை ஊரை ஏமாற்ற பொய் வழக்கு போட்டுள்ளதா
என்றெல்லாம் திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.
கருணாநிதியின் கேள்வி நியாயமான ஒன்று
தான். இதே கோணத்தில் தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும் துவக்கம் முதலே இந்த
கேள்விகளை எழுப்பி வருகிறது. எனவே, இந்த வழக்கில் யார் உண்மையான
குற்றவாளிகள் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய பொறுப்பு
காவல்துறைக்கு இருப்பதால், உண்மையான குற்றவாளியை விரைவில் அடையாளம் காட்டி
இந்த குழப்பத்திற்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு மாநிலச் செயலாளர் முஹம்மது ஷிப்லியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக