நாகப்பட்டினம்: விஸ்வரூபம் திரைப்பட தொடர்பாக முஸ்லிம் கூட்டமைப்பின்
நடவடிக்கையை வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான்
விமர்சித்ததற்கு இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பயணம் மேற்கொண்டிருந்த காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும் வேலூர் தொகுதி மக்களவை உறுப்பினருமான எம். அப்துர் ரஹ்மான் செம்பானர்கோயிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஸ்வரூபம் படம் தொடர்பாக தமிழக உள்துறை செயலருக்கு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் இப்பிரச்னையில் இவ்வளவு காட்டமாக சமூக நல்லிணக்கத்தை பாதித்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கும் வகையில் முஸ்லிம் கூட்டமைப்பினர் செயல்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களை காயப்படுத்தி மிரட்டி பணிய வைப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியது ஒரு மலிவான அரசியல் மற்றும் விளம்பரம் தேடிக் கொள்ளும் செயல்என குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், அப்துர் ரஹ்மான் எம்.பி-யின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.ஜி.கே.நிஜாமுதீன் வெளியிட்டு அறிக்கையில் முஸ்லிம்களின் உணர்வுகளை அரசு மூலம் தெரிவித்து, முஸ்லிம் கூட்டமைப்பினர் அமைதி வழியில் நடவடிக்கை மேற்கொண்டது எந்த விதத்திலும், யாரையும் மிரட்டிப் பணிய வகைக்கும் நடவடிக்கை இல்லை.
முஸ்லிம் கூட்டமைப்பினர் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்தது மலிவான அரசியல் மற்றும் விளம்பரம் தேடிக் கொள்ளும் செயல் என்று எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்திருப்பது துரதிருஷ்டமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக